×

வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களில் திரண்ட மக்கள் குமரியில் 1694 மையங்களில் நடந்தது

நாகர்கோவில், நவ.22: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1694 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில் கலெக்டர் அரவிந்த் அந்த மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2021 குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருவதன் தொடர்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்டது.

01.01.2021-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் மேற்கொள்ளவும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யவும், பொதுமக்கள் உரிய படிவங்களை பெற்று 16.11.2020 முதல் 15.12.2020 வரை தங்கள் பகுதியிலுள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வழங்கலாம் என்றும் மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். மேலும் நவம்பர் 21, 22 தேதிகள் மற்றும் 12.12.2020, 13.12.2020 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள், வாக்காளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கலெக்டர் அறிவித்திருந்தார்.

அந்தவகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடிகளில் குவிந்தனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல், அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயர்களை சேர்க்க, நீக்கம் செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினரும் தங்கள் பிரதிநிதிகள் மூலமாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெயர் சேர்க்க, நீக்க நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் 1694 மையங்களில் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு முகாமிலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முகாமை நடத்தினர். மேலும் மண்டல அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள் இப்பணிகளை கண்காணித்தனர். மேலும் ஆர்.டி.ஒ, சப் கலெக்டர் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பணியாற்றியவர்கள் இப்பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோரும் இப்பணிகளை மையங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆளூர் அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.

Tags : camps ,centers ,Kumari ,
× RELATED 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு...