நெய்வேலி, நவ. 21: நெய்வேலி வடக்குத்து டிடிஆர் நகரில் வசித்து வருபவர் சக்திவேல். நெய்வேலி மெயின் பஜாரில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இவரது மகன் பிரிதஷ்(13). இவர் இந்திரா நகர் மாற்றுக்குடியிருப்பில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பிரிதஷ் நேற்று முன்தினம் வீட்டில் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளான். அப்போது, இடியுடன் மழை பெய்ததால் அவரது தாயார் விளையாட வேண்டாம் என சத்தம் போட்டுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு அறைக்கு சென்ற பிரிதஷ் கயிறால் தூக்குப்போட்டு கொண்டான். சிறிது நேரம் கழித்து அவரது தாய் சென்றபோது, பிரிதஷ் தூக்கில் தொங்கியதை கண்டு கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் பிரிதஷை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பிரிதஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது மற்றும் போலீசார் பிரிதஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நெய்வேலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.