ஈரோடு, நவ. 21:தமிழகத்தின் பண்பாட்டினை விளக்கும் வகையிலான கையேட்டினை ஒரு மாதத்தில் 1 கோடி வீடுகளில் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ. தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். தெய்வீக தமிழக சங்கம் சார்பில் ‘தேசியம் காக்க தமிழகம் காக்க’ எனும் தலைப்பிலான கையேடு வீடுகள் தோறும் விநியோகிக்கும் திட்டத்தை பா.ஜ. சார்பில் நேற்று ஈரோட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. ஈரோடு முத்துசாமி வீதியில் உள்ள வீடுகளில் கையேடு விநியோகத்தை கட்சியின் மாநில தலைவர் முருகன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பா.ஜ. மாநில தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘தேசியம் காக்க தமிழகம் காக்க’ எனும் கையேடானது தமிழ் பண்பாடு, கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையில் வீடு வீடாக விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 மாத காலத்தில் 1 கோடி வீடுகளில் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆன்மிக பூமியாக மாற்ற பா.ஜ. பாடுபட்டு வருகிறது. இவ்வாறு முருகன் கூறினார்.