கரூர், நவ. 20: தினகரன் செய்தி எதிரொலியாக கரூர் பொன்நகர் பிரிவு அருகே வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கரூர் ராயனூர் பகுதியில் இருந்து திருச்சி பைபாஸ் சாலை செல்லும் வழியில் பொன்நகர் பிரிவு உள்ளது.நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வந்தன. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அல்லது பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என நவம்பர் 18ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியின் எதிரொலியாக நேற்று அதிகாலை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொன்நகர் பிரிவு அருகே பேரிகார்டு வைத்து வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளும், இந்த பகுதியினர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.