விருத்தாசலம், நவ. 12: விருத்தாசலம் கிளைச் சிறை கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆனந்த் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் செல்வமுருகனின் மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் 6 பேரிடம் வீடியோ ஆதாரத்துடன், செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கிளை சிறை அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து செல்வமுருகன் மனைவியான பிரேமா, தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல் துறையினர் துன்புறுத்தியதாகவும், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், டிஜிபி திரிபாதி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையம், விருத்தாசலம் கிளை சிறைச்சாலைகளில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் 5 பேர் கொண்ட குழு கடந்த நான்கு நாட்களாக விசாரணையை மேற்கொண்டனர். அதில் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, சிபிசிஐடி உயர்மட்ட அதிகாரியான துணைக் கண்காணிப்பாளர் குணவர்மன் தலைமையில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக செல்வமுருகனின் பூர்வீக கிராமமான காடாம்புலியூரில் விசாரணையை தொடங்கி, அவர் தற்போது வசித்து வந்த வடக்குத்து, கைது செய்யப்பட்ட நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து, நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி பணியில் இருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் விருத்தாசலம் கிளைச் சிறை காவலர்கள், அதிகாரிகள் என சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணையில் திருப்தி ஏற்படவில்லை என்று, படிவத்தில் கையெழுத்திடாமல் செல்வமுருகனின் குடும்பத்தினர் சென்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் செல்வமுருகன் குடும்பத்தார் விருத்தாசலம் நீதிமன்றத்துக்கு வந்து விசாரணையில்
பங்கேற்றனர்.