திருச்சி, நவ. 12: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி நடந்தது. ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி மற்றும் நேற்று முன்தினம் 8ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சல் மண்டபத்தில் காட்சியளித்தார். விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நடந்தது. பின்னர் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.