×

ஆள் கடத்தல் கும்பலை சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


அவிநாசி, நவ.12: அவிநாசியில் பொக்லைன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் துரைசாமி மகன் தட்சிணாமூர்த்தி (35). பொக்லைன் ஓட்டுநரான இவர், தனது நண்பர்கள் 3 பேருடன் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி அவிநாசி நோக்கி காரில் வந்தார். அப்போது, பின்னால் காரில் வந்த ஒரு கும்பல், காரை மறித்து, தட்சிணாமூர்த்தியின் கையை வெட்டியது.

விசாரணையில், இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் மது போதையில் காரை முந்தி கொண்டு வந்தபோது தகராறு செய்து தட்சிணாமூர்த்தியின் கையை வெட்டி தப்பி சென்றதும், அவர்கள் ஆள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக அவிநாசி போலீசார் திருப்பூர் ராயபுரம் பகுதியில் வசித்து வந்த கேரள மாநிலம், கஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்த நவாஸ் மகன் மதன் (எ) முகமதுசபி (29) உள்பட 3 பேரை கைது செய்தனர். மூவரில் முகமதுசபியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் ஏற்கனவே சிறையில் இருக்கும் முகமது சபியிடம் வழங்கப்பட்டது.

Tags : kidnapping gang ,
× RELATED துபாய் விமானத்துக்குள் பதுக்கி வைத்த...