×

திகாலையில் வீட்டில் நுழைந்து டாக்டர் தம்பதியை வெட்டி நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

பெரும்புதூர்: அதிகாலையில் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள், டாக்டர் தம்பதியை கத்தியால் வெட்டி, நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பெரும்புதூா் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும்புதூர் அருகே போந்தூர் ஏபிஎஸ் நகரை சேர்ந்தவர் அருள்தாஸ் (40). பிசியோதெரபி டாக்டர். இவரது மனைவி ஜோஸ்பின் அனிஸ்டர் (36). ஹோமியோபதி டாக்டர். இருவரும் வீட்டில் கிளினிக் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 7வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவரும் பணி முடிந்து வீட்டில் தூங்கினர். அதிகாலை சுமார் 4 மணியளவில், இவர்களது வீட்டு மாடி படிக்கட்டு வழியாக, மர்மநபர்கள் 4 பேர் கத்தி, வீச்சரிவாளுடன் கீழே இறங்கி வந்தனர்.

பின்னர், தம்பதி தூங்கி கொண்டிருந்த அறையைத் திறந்த மர்மநபர்கள், கத்தியை காட்டி அவர்களை மிரட்டினர். இதனால், அதிர்ச்சிcயடைந்த தம்பதி அலறி கூச்சலிட்டனர். இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், கத்தியால் இருவரையும் சரமாரி வெட்டி, வீட்டில் இருந்த பதிமூன்றரை சவரன் நகை, ஒன்றரை சவரன் வைர நெக்லஸ், 5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பினர். தகவலறிந்து பெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், நேற்று அதிகாலையில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள், அருள்தாஸ் வீட்டில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவின் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன், கொரோனா பரவல் காரணமாக அருள்தாஸ், குடும்பத்துடன் சொந்த ஊரான நாகர்கோவில் சென்றார். ஊரடங்கு தளர்வு அறிவித்தபின், கடந்த செப்டம்பர் 2ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த பைக்கின் சக்கரங்கள், பேட்டரி ஆகியவற்றை திருடி சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக அருள்தாஸ், போலீசில் புகார் அளித்தார். அந்த வழக்கில், இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : house ,persons ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை