அண்ணாநகர், நவ.10: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (29). கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவர், மனைவி சந்தியா (26) மற்றும் சஞ்சனா என்ற 3 மாத பெண் குழந்தையுடன் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தங்கியிருந்தார். தினசரி வேலை முடிந்ததும், இரவில் அங்குள்ள 3 சக்கர வாகனத்தில் 3 பேரும் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ரமேஷ், தனது மனைவி, குழந்தையுடன் தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சஞ்சனா காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே, மார்க்கெட் வளாகம் முழுவதும் குழந்தையை தேடினர். ஆனால், எங்கு தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.