×

அருள்வாக்கு கேட்க சென்றபோது பரிதாபம் அம்மன் கோயிலில் அதிகாலை பெண் தீக்குளித்து தற்கொலை

மதுராந்தகம், நவ.10: சென்னை தேனாம்பேட்டை கவிஞர் பாரதிதாசன் சாலையை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி தங்கம் (36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தங்கம் உடல்நிலை பாதிப்படைந்துள்ளார். இதற்காக அவர், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், தங்கத்துக்கு பேய் பிடித்திருப்பதாகவும், மதுராந்தகம் அடுத்த இந்தலூர் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்று, அருள்வாக்கு கேட்டால் சரியாகிவிடும் என சிலர் கூறியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள், கடந்த 7ம் தேதி தங்கத்தை அழைத்து கொண்டு இந்தலூர் கோயிலுக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில், தங்கத்துக்கு அருள்வாக்கு கூறியவர், ‘தொடர்ந்து கோயிலில் 21 நாட்கள் தங்கி, சிறப்பு பூஜைகள் செய்யவேண்டும். அப்படி செய்தால் நோய் குணமாகிவிடும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்கம், அவரது தாய் மற்றும் மாமியார் ஆகியோர் கோயில் வளாகத்தில் தங்கினர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில், கோயில் அருகே இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதனால், அக்கம் பக்கத்தினர் திடுக்கிட்டு, கோயிலுக்கு ஓடிவந்தனர். அங்கு, தங்கம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயை அணைத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். அதற்குள் தங்கம் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், தங்கம் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நேற்று அதிகாலை உறவினர்கள் தூங்கி கொண்டிருந்தபோது, அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கோயில் வளாகத்தில் சென்ைன இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : suicide ,goddess temple ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை