ஆலங்குளம், நவ. 10: ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர், சுப்பையாபுரம் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை தனியாருக்கு சொந்தமான சோலார் கம்பெனிகள் அத்துமீறி வளைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை விவசாயிகள் காவல்துறைக்கும், வருவாய்த்துறையினருக்கும் மனு கொடுத்தும் இரண்டு துறையினரும் அலைக்கழித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட 35க்கும் மேற்பட்ட விவசாயிகள் அருணாசலபேரியை சேர்ந்த கோவிந்தசாமி தலைமையில் நெட்டூர் ஆறுமுகம், சுப்பையாபுரம் அருள்தாஸ், கிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் நேற்று ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது ஆலங்குளம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் அரசு அதிகாரிகள் மற்றும் ரவுடிகளால் சினிமா பாணியில் சோலார் நிறுவனத்துக்காக ஆக்ரமிக்கப்பட்டுள்ளது’ என்றனர். அவர்களிடம் தாசில்தார் பட்டமுத்து, எஸ்ஐக்கள் பேச்சிமுத்து, சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தாசில்தார் சர்வேயரிடம் சம்பந்தப்பட்ட இடங்களை போலீஸ் துணையுடன் முறையாக அளவீடு செய்யும்படி உத்தரவிட்டதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.