புதுக்கோட்டை, நவ. 10: புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் தற்காலிகமாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வெளியிடப்பட்ட உத்தரவை ரத்து செய்து, பதவியிறக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வருவாய்த் துறை அலுவலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2020 மார்ச் 5ம் தேதி கலெக்டர் .உமாமகேஸ்வரி ஒரு உத்தரவைப் பிறப்பித்தார்.அதன்படி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடத்தில் இருந்த 53 பேரையும் துணை வட்டாட்சியர்களாக தற்காலிகப் பதவி உயர்வு அளித்து பணிநியமனம் செய்யப்பட்டிருந்தது. இந்த உத்தரவு தவறானது எனக் கூறி மற்றொரு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.இதன் தொடர்ச்சியாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில், வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட்ட உத்தரவின்படி மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஏற்கெனவே வெளியிடப்பட்ட 53 பேரின் தற்காலிகப் பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டு, முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பதவி இறக்கம் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.