பாடாலூர், நவ 9: பாடாலூர் அருகே பெண்ணுக்கு சூடு வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்து முன்ஜாமீன் பெற்று வந்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆலத்தூர் தாலுகா தெரணி கிராமம் இந்திரா காலணியைச் சேர்ந்தவர் தமிழ்வாணன் மனைவி அபிஷேகா (23). அதே கிராமத்தில் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் நல்லுசாமி. இவரது மனைவி நாகஜோதி. அபிஷேகா நல்லுசாமி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த நல்லுசாமியும், அவரது மனைவி நாகஜோதியும் அபிஷேகாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கி உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்து, மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அபிஷேகா பாடாலூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து பெண்ணை சித்ரவதை செய்த நாகஜோதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணவர் நல்லுசாமியை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த நல்லுசாமி முன்ஜாமீன் பெற்றுக் கொண்டு நேற்று ஊருக்கு சென்றார். அப்போது அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். காயமடைந்த நல்லுசாமி பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.