×

முன்விரோதத்தால் கட்டையால் தாக்கி முதியவர் கொலை உறவினருக்கு போலீசார் வலை

திருப்பூர்,நவ.9: திருப்பூர் காலேஜ் ரோடு, மாஸ்கோ நகரை சேர்ந்தவர் நடராஜன் (எ) பழனிசாமி (68). இவர் சிறுபூலுவபட்டி தபால் நிலையம் பின்புறம் உள்ள தண்டபாணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த 2 ஆண்டாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தண்டபாணிக்கும் அவரது உறவினரான சாமுண்டிபுரத்தை சேர்ந்த  ராமசாமி (60) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக ராமசாமி அடிக்கடி தண்டபாணியின் தோட்டத்திற்கு சென்று பழனிசாமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி ராமசாமி, தண்டபாணிக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த பழனிசாமியிடம் தண்டபாணி குறித்து கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் 2ம் தேதி தோட்டத்துக்கு சென்ற ராமசாமி, பழனிச்சாமியை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் பழனிச்சாமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கோவையில் சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார் தலைமறைவான ராமசாமியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மின் மோட்டார் பழுதை சரி செய்ய கோரிக்கை