×

சிறையில் கைதி இறந்த விவகாரம்; நெய்வேலி காவல்நிலையம், விருத்தாசலம் கிளை சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை: சாத்தான்குளம் போன்று விஸ்வரூபம் எடுக்கிறது

விருத்தாசலம், நவ. 9: சிறையில் கைதி இறந்த விவகாரம் தொடர்பாக நெய்வேலி காவல்நிலையம் மற்றும் விருத்தாசலம் கிளை சிறையில் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணையை துவங்கினர். அப்போது கிளை சிறையில் இருந்த சிறை காவலர்கள் மற்றும் சிறை கைதிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் செல்வமுருகன்(39), முந்திரி வியாபாரி. இவருக்கு திருமணமாகி பிரேமா என்ற மனைவியும், 16 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர் வழிப்பறி, திருட்டு என பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக,

கடந்த மாதம் 28ம் தேதி நெய்வேலி பிளாக் எண்-26ல் காவியா என்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்ததாக நெய்வேலி நகரத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து, விருத்தாசலம் கிளை சிறையில் கடந்த மாதம் 30ம் தேதி அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால், சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து செல்வமுருகனை சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மீண்டும் 4ம் தேதி வலிப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த குற்றவியல் நடுவர் ஆனந்த் வீடியோ ஆதாரத்துடன், செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் செல்வமுருகன் உடலை, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே செல்வமுருகன் மனைவி பிரேமா, தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் சித்ரவதை செய்து கொன்று விட்டனர்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடடிவக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், பிரேமா, அவரது உறவினர்களும் மறியல், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இவ்விகாரம் கடலூர் மாவட்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் கைதி இறந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூகஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், டிஜிபி திரிபாதி, செல்வமுருகன் இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம்  சிறைச்சாலையில் கைதியின் இறப்பு குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்த் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டார்.

தற்போது, இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர். அப்போது சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 12 மணியளவில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் விசாரணையைத் தொடங்கினர். அங்கு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், குற்றப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் 7 குற்றப்பிரிவு போலீசாரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.  அதன்பின்னர் விருத்தாசலம் கிளைச் சிறையில் விசாரணை நடத்தினர்.

அப்போது கிளை சிறை காவலர்கள் மற்றும் சிறை கைதிகள் சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் இறந்த சம்பவம் போன்று இச்சம்பவத்துக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளதால் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன்
செல்வமுருகன் மனைவி பிரேமா கூறியதாவது, எனது கணவர் மீது பொய் வழக்கு போட்டதோடு, அதனை ஒப்புக்கொள்ள கூறி, சித்ரவதை செய்து போலீசார் கொன்று விட்டு நாடகமாடுகின்றனர். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது. எனது கணவர் சாவில் தொடர்புடையை அனைத்து போலீசாருக்கும் தண்டனை கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். எனது கணவர் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம் என்றார்.

Tags : prisoner ,death ,police investigation ,prison ,police station ,Neyveli ,CBCID ,branch jail ,Sathankulam ,Virudhachalam ,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை