ஆவடி: ஆவடியில் வழிப்பறி கொள்ளையனுடன் போராடி பெண் தங்க சங்கிலியை மீட்டார். ஆவடி, ஜே.பி எஸ்டேட், 13வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (37). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரியா (31). நேற்று முன்தினம் பிரியா வீட்டிலிருந்து டெய்லர் கடைக்கு சென்றார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர், அவர்களில் ஒருவன் பைக்கில் இருந்து இறங்கி வந்து பிரியாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலிச்செயினை பறிக்க முயன்றார். தங்க சங்கிலியை பிரியா கெட்டியாக பிடித்து கொண்டு கொள்ளையனுடன் போராடியுள்ளார். மேலும், அவர் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் அழைத்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த, வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து பைக்கில் வேகமாக தப்பி சென்று சென்றுவிட்டனர். இதுகுறித்து பிரியா, ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் படி போலீசார் சார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வழிப்பறி கொள்ளையன் உருவத்தை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.