உத்திரமேரூர்: பண்டிகை காலத்தில், கொரோனா பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சிகளில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடன் கூட்டம் நடத்த கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார். அதன்படி, உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் தீபாவளி உள்பட பண்டிகைகள் வர உள்ளன. பொது இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமல் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகக்கவசம், தனி நபர் இடைவெளி, அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி உள்ளிட்டவைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடை வீதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, தேவையான நடவடிக்கைகள், குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கூடுதல் போலீசாரை ஈடுபடுத்துவது ஆகியவை குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், சீனிவாசன், வட்டாட்சியர் ஏகாம்பரம், செயல் அலுவலர் லதா உள்பட பல்வேறு அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.