×

போலி முத்திரையை பயன்டுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி 2 பேர் கைது

கடலூர், நவ. 6:   அரசு வேலை வாங்கி தருவதாக போலி முத்திரையை பயன்படுத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
 கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் மாயமணி (34), டிரைவர். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த வரக்கால்பட்டை சேர்ந்த அருள் மகன் பிரபு (30), கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வந்த நாச்சியார்பேட்டையை சேர்ந்த மணி மனைவி லட்சுமியுடனும்(46) பழக்கம் ஏற்பட்டது. இதில் லட்சுமி மாற்றுத்திறனாளி ஆவார். இந்நிலையில் பிரபுவும், லட்சுமியும் தாங்கள் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளோம், உங்களுக்கும் வேலை வாங்கி தரவேண்டுமா? என மாயமணியிடம் கேட்டுள்ளனர்.

 மாயமணி, தனக்கு அரசு அலுவலகங்களில் ஏதாவது ஒரு வேலை வாங்கி கொடுக்கும்படி, அவர்களிடம் கூறியுள்ளார். வேலை வாங்கி கொடுக்க வேண்டுமானால் தங்களுக்கு ரூ.3 லட்சம் தரவேண்டும் என பிரபுவும், லட்சுமியும் கேட்டுள்ளனர். ஆனால் பணம் இல்லாத மாயமணி, வீட்டில் இருந்த நகைகளை எடுத்து, லட்சுமியிடம் கொடுத்து அதனை ரூ.3 லட்சத்துக்கு அடகு வைத்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். லட்சுமி, அதனை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டார்.

 இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியும், பிரபுவும் மாயமணியிடம் உங்களுக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிரிவில் உதவியாளர் வேலை கிடைத்துள்ளது என்று கூறி அதற்கான ஆணையை கொடுத்துள்ளனர். அந்த ஆணையை பெற்றுக்கொண்ட மாயமணி, கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஆணையை கொடுத்தார். ஆணையை பெற்ற அதிகாரி, அது போலியானது என்பதை அறிந்து, உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார் மாயமணியிடம் விசாரணை நடத்தினர்.  

 இதில் மாயமணிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு, லட்சுமியும், பிரபுவும் போலி முத்திரைகளை பயன்படுத்தி வேலைக்கான ஆணையை தயார் செய்து கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி, பிரபு ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை மற்றும் ரூ.1லட்சம், போலி முத்திரைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்று யார், யாருக்கு போலி முத்திரைகள் பயன்படுத்தி வேலை வாங்கி கொடுத்துள்ளனர் என்பது தொடர்பாகவும், இவர்களுடன் தொடர்புடைய நபர்கள் யார், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் யாருக்காவது இதில் தொடர்பு உண்டா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...