மண்ணச்சநல்லூர், நவ.6: வாத்தலை சுனைப்புகுநல்லூரில் அரசின் அனுமதியின்றி காவிரி ஆற்றில் பெருவளைவாய்க்காலில் ஒரு கும்பல் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக திருச்சி எஸ்பி., ஜெயச்சந்திரன் அமைத்துள்ள தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீஸ் டிஎஸ்பி., பால்சுதர் மேற்பார்வையில் எஸ்.ஐ., நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர்.
இதில் 11 பேர் கொண்ட மணல் கொள்ளைக் கும்பல் மணலை மூட்டைகளில் கொள்ளையடித்து சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் அந்த கும்பலை சேர்ந்த 2 பேர் போலீசிடம் சிக்கினர். மேலும் ஒரு செல்போன், ரூ.10 ஆயிரம் ரொக்கம், சரக்கு வேன் மற்றும் 30 மணல் மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் சுனைபுகுநல்லூரைச் சேர்ந்த முருகானந்தம் மகன் தனுஷ் (25), விஜய்(25) என்று தெரிய வந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி சுனைபகுநல்லூரைச் சேர்ந்த வாகன உரிமையாளர் இளங்கோவன், டிரைவர் மகேந்திரன் உள்ளிட்ட 9 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.