ஊட்டி,நவ.6: ஊட்டியில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொள்ளும் அரசு விழா மிகவும் எளிமையாக நடக்கிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துக் கொள்ளும் அரசு விழாக்கள் பொதுவாக பிரமாண்டமாக நடப்பது வழக்கம். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முதல் அமைச்சர் கலந்துக் கொள்ளும் விழா தமிழகம் மாளிகையில் எளிமையாக நடக்க இருக்கிறது. இதில், பயனாளிகள் மட்டுமே கலந்துக் கொள்ளும் வகையில் சிறிய மேடை மற்றும் பந்தல் தமிழகம் மாளிகை புல் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் 50 பேர் மட்டுமே கலந்துக் கொள்ளும் வகையில் ஆய்வு கூட்ட அரங்கமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனால், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விழா மேடைக்கு அருகில் செல்ல வாய்ப்பில்லை. மேலும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விழா சுமார் ஒன்றரை மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.