புதுக்கோட்டை, நவ.5: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நெடுஞ்சாலை ரோந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. ஆலங்குடி வழியாக புதுக்கோட்டை-புளிச்சங்காடு கைகாட்டி வரையில் காவல் துறை சார்பில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் ஏற்படுத்த வேண்டும் என ஆலங்குடி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் மணமோகன் தலைமையில் அச்சங்கத்தினர் நேற்று முன்தினம் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் ஆலங்குடியில் இச்சேவை நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இதை, ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதன் மூலம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்தின் எண்ணக்கை 5 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.