×

திண்டிவனம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ₹20 லட்சம் போலி மதுபாட்டில், 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

திண்டிவனம். நவ. 4:  திண்டிவனம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் போலி மதுபாட்டில்கள், 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.  திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே தேங்காய்பாக்கம் கிராம வயல்வெளி பகுதியில் உள்ள வீட்டில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்மணியிடம் விசாரணை நடத்தினார். இதில் வீட்டின் ஒரு அறை பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 507 கேன்களில் எரிசாராயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சோதனை செய்ததில் அந்த அறைகளில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் எரிசாராயம், 20 அட்டைப்பெட்டி உள்ளிட்டவைகளில் 1080 பாட்டில்களில் போலி மதுபானங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வயல்வெளி பகுதியில் சென்னையில் உள்ள ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் ஒலக்கூர் மேல்பாதி மேற்கு தெருவை சேர்ந்த கோதண்டம் மகன் ராமு (42) என்பவர்  குத்தகைக்கு எடுத்து போலி மதுபாட்டில்கள், சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் மற்றும் போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் இருக்குமென போலீசார் தெரிவித்தனர்.

Tags : house ,Tindivanam ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை