×

கடலூர் அருகே வரதட்சணை கொடுமையால் கூட்டுறவுத்துறை பெண் அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை

கடலூர், நவ. 4:  கடலூர் அருகே  வரதட்சணை கொடுமையால் கூட்டுறவு துறை பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமியாரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள சின்னதானகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் சுசீதா கிருபாலினி(25). கடலூர் கூட்டுறவு துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடலூர் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவநாதன் மகன் சந்தோஷ்குமார்(28). வழக்கறிஞருக்கு படித்த நிலையில் கடலூரில் உள்ள மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். சுசீதா கிருபாலினி மற்றும் சந்தோஷ் குமாருக்கு கடந்த ஆகஸ்ட்  30ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகை மற்றும் கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கேட்ட நிலையில் 45.5 பவுன் நகை கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு கிருபாலினியிடம், மாமியார் இந்திராவும், கணவர் சந்தோஷ்குமாரும் பாக்கி நகை மற்றும் பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 இதனை தொடர்ந்து சுசீதா கிருபாலினி கடந்த 31ம் தேதி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து 2ம் தேதி (திங்கட்கிழமை) பணிக்கு சென்றுள்ளார். பிறகு  எம்.புதூரில் உள்ள கணவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதற்கிடையே நேற்று கிருபாலினி அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று, கிருபாலினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கிருபாலினி வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு கணவர், மாமியார் மற்றும் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் கிருபாலினி உடலை வாங்கவும் மறுத்து விட்டனர்.

இதையடுத்து டிஎஸ்பி சாந்தி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி, கணவர் சந்தோஷ்குமார், மாமியார் இந்திரா ஆகியோரை கைது செய்தனர். மேலும் சந்தோஷ்குமாரின் சகோதரியை போலீசார் தேடி வருகின்றனர்.  மேலும் திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமையால் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : officer ,suicide ,Cuddalore ,
× RELATED முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை கைது செய்ய ஆணை!!