விருதுநகர், நவ.4: விருதுநகரில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில், மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என திமுக மாவட்ட செயலாளர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் இருவரும் சூளுரைத்தனர். விருதுநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்களின் சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் ‘தமிழகம் மீட்போம்’ என்ற 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 372 இடங்களில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் கந்தசாமி ராஜம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ சிறப்பு பொதுக்கூட்டத்தில் திமுக முன்னோடிகள் 140 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு பேசுகையில், விருதுநகரில் 2004ல் நாடாளுமன்ற தேர்தலில் தென்மண்டல மாநாடு, 2019 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகரில் மாநாடு நடத்த வாய்ப்பு கிடைத்தது. தற்போது ‘தமிழகம் மீட்போம்’ சட்டமன்ற தேர்தல் பொதுக் கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில் நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்’என்றார்.
தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில்,‘ வரும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தருவோம் என்றார். அதை தொடர்ந்து கொள்கைப்பரப்பு செயலாளர் லியோனி சிறப்புரையாற்றினார். பொதுச் செயலாளர் துரைமுருகன் உரையாற்றினார். கூட்டத்தில் எம்எல்ஏக்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் குன்னூர் சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.