×

திருட முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி ஆரணி அருகே பரபரப்பு பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து

ஆரணி, நவ.3: ஆரணி அடுத்த நெசல்புதுட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி கவுரி(55), கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில், நேற்று கவுரி வீட்டைப் பூட்டிக் கொண்டு, அதே பகுதியில் உள்ள தனது மகள் மகேஸ்வரி வீட்டிற்கு மதிய உணவிற்காக சென்றார். பின்னர் உணவு அருந்திவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பகுதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, வீட்டின் கதவை திறக்க முயன்றபோது, கதவின் உட்பகுதியை பூட்டிவிட்டு பீரோவை உடைத்து மர்ம ஆசாமி ஒருவர் திருடிக்கொண்டிருப்பதை பார்த்தார். பின்னர், திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். இதைக்கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது, மர்ம ஆசாமி அங்கிருந்த சந்தில் பதுங்கி இருந்தார். இதையடுத்து, அவர்கள் அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து, கவுரி வீட்டில் திருடிய ஒன்றரை சவரன் நகை மற்றும் ₹5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் எதிரே உள்ள கம்பத்தில் கட்டிவைத்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் தாலுகா ஒரத்தி கிராமத்தை சேர்ந்த அரவிந்தகுமார்(36) என்பதும், கவுரி வீட்டில் திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : teenager ,house ,Dharma Adi Arani ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்