×

தூத்துக்குடி வாலிபர் கொலையில் ஒருவர் கைது கோவில்பட்டி கோர்ட்டில் பிரபல ரவுடி தம்பி சரண்

தூத்துக்குடி, நவ. 3: தூத்துக்குடியில் நடந்த வாலிபர் கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி கோர்ட்டில் பிரபல ரவுடியின் தம்பி சரணடைந்த நிலையில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி அ. சண்முகபுரத்தைச் சேர்ந்த வேல்ராஜ் மகன்கள் முத்துகுமார் (32), வாழ்வாங்கி (27). வேல்ராஜ், கிருஷ்ணராஜபுரம் மெயின்ரோட்டில் பகலில் இறைச்சி கடையும், இரவில் புரோட்டா கடையும் நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக இளைய மகன் வாழ்வாங்கி இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வாழ்வாங்கி கடையை பூட்டிக் கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர், வாழ்வாங்கியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலைசெய்து விட்டு தப்பியோடினர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த வடபாகம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி ஆரோக்கியபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் எபநேசர் பிரசாத் என்ற பிரசாத் (30), தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்த பரமசிவன் மகன் காளிராஜ் என்ற கட்டகாளி(38), ஆரோக்கியபுரம் கெபி தெருவைச் சேர்ந்த விஜி மகன் அந்தோனி வினோத் என்ற வினோத் (26) ஆகிய மூவரும் வாழ்வாங்கியை வெட்டிக் கொலை செய்தது, தெரியவந்தது. இதையடுத்து வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள், எஸ்ஐக்கள் ரவிக்குமார், மகாராஜன், ராஜபிரபு தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், நேற்று முன்தினம் இரவு காளிராஜ் என்ற கட்டகாளியை கைது செய்தனர். அத்துடன் தலைமறைவாக உள்ள கூட்டாளிகளான எபநேசர் பிரசாத் என்ற பிரசாத், அந்தோனி வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

 போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாழ்வாங்கி, பிரபல ரவுடியான பட்டு என்ற பட்டுராஜாவின் அண்ணன் மகன் ஆவார். பட்டுராஜா கொலைக்கு பழிக்கு பழியாக அவரை கொலை செய்த சிந்தா சரவணனை கடந்த ஆண்டு வாழ்வாங்கியின் அண்ணன் முத்துக்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து கொலை செய்தனர். இதற்கு  வாழ்வாங்கி பண உதவி செய்துள்ளார் என சிந்தா சரவணன் தரப்பினர்  கருதியுள்ளனர்.  இதனால் சிந்தா சரவணனின் நண்பர்கள் வாழ்வாங்கியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையே இக்கொலை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மாரிகுமார் மகன் ஆனந்த் (30) என்பவர்  கோவில்பட்டி  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 2) சரணடைந்தார். இதையடுத்து அவரை 4 நாட்கள் நீதிமன்றக் காவலில் பேரூரணி கிளைச்  சிறையில் அடைக்கவும், வரும் 6ம் தேதி தூத்துக்குடி குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் (எண் 3) ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இவர் பிரபல ரவுடி சிந்தா சரவணனின் தம்பி ஆவார். இதையடுத்து இவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க வடபாகம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Charan ,court ,Kovilpatti ,Thoothukudi ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...