விழுப்புரம், நவ.3: விழுப்புரத்தில் சைக்கிள் கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த ஆசாமிகள் ரூ.1.73 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் நேருஜி சாலை வீர வாழியம்மன் கோயில் எதிரே தனியார் சைக்கிள் விற்பனை கடை உள்ளது. நேற்று முன்தினம் மதியம் வரையில் மட்டும் கடை திறக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலையில் கடையின் உரிமையாளர் சிவசங்கர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் சுவற்றில் ஓட்டை போட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பண பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது.
மேலும் கொள்ளை அடித்தவர்கள் கடை முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டு சென்றுள்ளனர்.இது குறித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் சிவசங்கர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளை அடித்தவர்கள் யார் என தேடி வருகின்றனர்.