×

தி.நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் 400 சிசிடிவி பதிவு மூலம் மார்க்கெட் சுரேஷ் கைது: கூடுதல் ஆணையர் பேட்டி

சென்னை: தி.நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் 400 சிசிடிவி கேமராக்கள் பதிவு மூலம் மார்க்கெட் சுரேஷை கைது செய்ததாக கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்தார். தி.நகர் நகைக்கடை கொள்ளை வழக்கில் நகைகள் மீட்கப்பட்டது குறித்து கூடுதல் ஆணையர் தினகரன் நேற்று பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வாடிக்கையாக கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தான் இந்த கொள்ளையில்  ஈடுபட்டனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட மார்க்கெட் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மீது ஏற்கனவே கோடம்பாக்கத்தில் கொள்ளையில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் உள்ளன.

மேலும் அற்புதராஜ், வெங்கடேசன் ஆகிய இருவரும் கொள்ளையடித்த நகையை பத்திரப்படுத்த உதவியுள்ளனர். நிறைய வழக்குகளில் 3 பேரும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஜெயலில் இருக்கும் போது இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 400 சிசிடிவி கேமாரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையன் மார்க்கெட் சுரேஷை கைது செய்தோம். அதன்மூலம் தான் மற்றொருவரும் உடன் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளியில் இருந்து வந்து தான் கொள்ளையடித்துள்ளனர் என்று நினைத்தோம். சிசிடிவி மூலம் வெளியில் இருந்து ஆட்கள் வரவில்லை என்று தெரியவந்தது. சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யும் போது நகையை கொடுத்தனர்.

திருவள்ளூரில் கங்காதேவியை பிடிக்கும் போது நகையை எடுத்து கொடுத்தார். மேலும் கடைகளில் இவ்வளவு நகையை எப்படி  சாதாரணமாக அலமாரியில் வைத்தார்கள் என்று தெரியவில்லை. சாதாரணமாக ஒரு குச்சியை வைத்து தான் எடுத்துள்ளார். எனவே விரைவில் அனைத்து நகைக் கடை உரிமையாளருடன் விழிப்புணர்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அதன்பிறகு தான் எவ்வளவு நகை கொள்ளைபோனது என தெரியவரும். சென்னையில் மட்டும் அவர் மீது 8 வழக்குகள் உள்ளன. மற்ற மாவட்டங்கள் சேர்த்தால் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். கொள்ளையடிக்கப்பட்டதில் இதுவரை 1.4 கிலோ தங்கம், 11 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : Suresh ,Commissioner ,T. Nagar ,interview ,
× RELATED 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற...