×

தேவாலயங்கள்,கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் வழிபாடு

விருதுநகர், நவ.3: கிறிஸ்தவ குடும்பங்களில் இறந்தோர் நினைவாக நவ.2 கல்லறை திருநாளாக அனுசரிக்கின்றனர். விருதுநகர் மற்றும் சுற்று கிராமங்களில் கல்லறை திருநாள் அனுசரித்தனர். இறந்த முன்னோர் கல்லறைகளை சுத்தம் செய்து மாலை சூடி மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். விருதுநகர் இன்னாசியார் ஆலயத்தில் பங்குத்தந்தை பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ், துணை பங்குத்தந்தை சந்தியாகப்பன் தலைமையில், ஆத்துப்பாலம் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ்வெனிஸ் தலைமையில், பாண்டியன்நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன், எஸ்.எப்.எஸ் பள்ளி முதல்வர் இன்னாசிமுத்து தலைமையில், ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை பெனடிக்ட் பர்ணபாஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள குழந்தை ஏசு ஆலய வளாக கல்லறை தோட்டம், காந்தி நகர் கல்லறை தோட்டத்திலும், ஆர்.ஆர்.நகர் கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர். திருவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் திரண்டு முன்னோர்களின் நினைவிடத்தில் சென்று மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும்  பிரார்த்தனை செய்தனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய நினைவு கூர்ந்தனர்.

Tags : churches ,cemeteries ,
× RELATED தேசிய திருநங்கையர் தினம்: முதல்வர் வாழ்த்து