ஈரோடு, நவ.3: ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள ஜவுளி கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி மாஸ்க் அணியாதவர்களுக்கு அபாரதம் விதித்தனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடை வீதிகளில் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றாமலும், மாஸ்க் அணியாமலும் அலட்சிமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கடைகளில் மாஸ்க் அணியாமல் இருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மாஸ்க் இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது என்றும், கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் ஜவுளி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது, மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், சுகாதார அதிகாரி இக்பால், சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், நல்லசாமி, சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.