×

ஊத்துக்கோட்டையில் புதர் மண்டி கிடக்கும் ஏரிக்கால்வாய்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை, நவ.1: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மிகப்பெரிய ஏரியான 914 ஏக்கர் கொண்ட ஈசா ஏரி உள்ளது.  இந்த ஏரிக்கு மழை காலங்களில் ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழை நீர் சுருட்டபள்ளி அணைக்கட்டிற்கு வந்து அங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பின்னர் அங்குள்ள ஏரிக்கால்வாய் வழியாக ஊத்துகோட்டை ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியதும், இங்கிருந்து தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், சிங்கிலி குப்பம், செஞ்சியகரம், முக்கரம் பாக்கம் உட்பட 14 ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் அனைத்தும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இது விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாகும்.  

இந்நிலையில், சுருட்டபள்ளி அனைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரி வரை உள்ள கால்வாய் முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது. மேலும் கால்வாய் கரை ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரிக்கால்வாயில் கலக்கிறது. இதனால் ஏரிக்கு செல்லும் மழைநீருடன் கழிவு நீரும் கலக்கிறது. இதனால் ஏரி நீர் மாசடையும் நிலை உள்ளது  இந்த நீர் வயலுக்கு செல்லும்போது அந்த பயிர்களும் அழுகும் நிலை ஏற்படும். எனவே சுருட்டபள்ளி முதல் ஊத்துக்கோட்டை ஏரி வரை உள்ள கால்வாயை தூர்வாரி  சுத்தம் செய்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேபோல் ஊத்துக்கோட்டை ஏரிக்கு செல்லும் கால்வாயில் கழிவுநீர் கலந்து கூவம் நதிபோல் மாறிவிட்டது. மேலும், சத்தியவேடு சாலையில் உள்ள பாலத்தின் கீழே அப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இந்த குப்பை கழிவுகள் கால்வாயில் தண்ணீர் வரும்போது ஏரிக்கு அடித்துச்செல்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஊத்துக்கோட்டை ஈசா ஏரிக்கு செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும், தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் சுருட்டபள்ளி அணைக்கட்டில் இருந்து ஊத்துக்கோட்டை ஏரிக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Uthukottai ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...