×

காஞ்சிபுரம் நகர் முழுவதும் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம்

காஞ்சிபுரம், நவ.1: காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத அன்னாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.இதையொட்டி, செவிலிமேடு காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு அன்னம் மற்றும் காய் கனிகளால் அலங்காரம் செய்து, சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இந்த அலங்காரத்தில் சிவனை தரிசனம் செய்தால், ஆண்டு முழுவதும் உணவுக்கு குறையிருக்காது என்பது ஐதீகம்.
இதேபோன்று கைலாசநாதர், ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், நகரீஸ்வரர், அறம்வளத்தீஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், முத்தீஸ்வரர், தவளேஸ்வரர் ஆகிய கோயில்கள் உள்பட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில், கோயில் ராஜ கோபுரம், விமானம், சன்னதிகள் ஆகியவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆட்சீஸ்வரர் மற்றும் உமையாள் ஆட்சிஸ்வரர் ஆகியேருக்கு அரிசி சாதம், பழங்கள் கொண்டு அன்னாபிஷேக அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது.அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை, சிவாச்சாரியார் ஊர்வலமாக நான்கு மாடவீதிகளில் எடுத்து சென்று கோயில் எதிரில் உள்ள குளத்தில் கரைத்தார். இதில் சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Annabhishekam ,temples ,Shiva ,Kanchipuram ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு