குடியாத்தம், நவ.1: குடியாத்தத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில், நியமன அலுவலர் எஸ்.சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கிளமென்ட் தேவபாலன் மற்றும் அதிகாரிகள் நேற்று, குடியாத்தம் அண்ணா தெரு, ஜிபிஎம் தெரு, அம்பாபுரம், காய்கறி சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, ஓட்டல், குடோன் உட்பட 50க்கும் மேற்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது, பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திய 2 அரிசி மண்டிகளுக்கு தலா ₹2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அண்ணா தெருவில் உள்ள கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைக்கு சீல் வைத்தனர்.