ஓட்டப்பிடாரம், நவ 1: பசுவந்தனையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டப்பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கிவைத்தார். ஓட்டப்பிடாரம் ஒன்றியம், பசுவந்தனை ஊராட்சிப் பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான திட்டப்பணிகளைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று (31ம் தேதி) நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஊராட்சியில் இடம்பெற்ற 1,367 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டப்பணியைத் துவக்கிவைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் அனைத்து கிராம பகுதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 3 ஆண்டுகளில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டில் 976 குக்கிராமங்களில் உள்ள 1,67,356 வீடுகளுக்கான பணி நடந்து வருகிறது. பசுவந்தனை ஊராட்சியில் 967 வீடுகளுக்கு ரூ.48.76 லட்சம் மதிப்பிலும், பசுவந்தனை அலிபச்சேரி கிராமத்தில் 400 வீடுகளுக்கு ரூ.21.03 லட்சம் மதிப்பிலும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் துவக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் பசுவந்தனையில் 14வது மத்திய நிதிக்குழு நிதி ரூ.12.75 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளும் துவங்கிவைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
நிகழ்ச்சியில் சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், தேவராஜ், பிடிஓக்கள் ஹெலன், வளர்மதி, பசுவந்தனை பஞ்சாயத்து தலைவர் லட்சுமி சிதம்பரம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் போடுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.