மார்த்தாண்டம், நவ.1: மார்த்தாண்டத்தில் மாட்டிறைச்சி கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்த்தாண்டம் விரிகோடு ரயில்வே கிராசிங் பகுதியில் மாட்டிறைச்சி கடை செயல்பட்டுவருகிறது. இந்த கடையில் சட்டவிதிகளை பின்பற்றாமல் கடையிலேயே பசுமாடு, எருமை முதலியவற்றை வெட்டுவதால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதுடன் சாலை வழியாக நடந்து செல்வோர் மீது ரத்தக்கறை தெறிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாட்டிறைச்சி கடையை விரிகோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு இறைச்சி வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது தொடர்பாக பாஜ கிள்ளியூர் வடக்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் கட்டிட உரிமையாளர் மற்றும் மாட்டிறைச்சி கடை உரிமையாளர் மீது மார்த்தாண்டம் காவல் நிலையம் மற்றும் உண்ணாமலை கடை பேருராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.