பந்தலூர்,நவ.1: பந்தலூர் தாலுக்கா தலைநகரமாகும் கூடலூரில் இருந்து பந்தலூர் பேருந்து நிலையத்திற்கு வந்து சமவெளிப்பகுதியான கோவை,சேலம்,திருப்பூர்,ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மேலும் சில பேருந்துகள் பந்தலூரில் இருந்து தாளூர், சேரம்பாடி கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பாட்டவயல், உப்பட்டி மற்றும் கேரள மாநிலம் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பந்தலூர் பஸ் ஸ்டாண்டில் நேரக் காப்பாளர் ஒருவர் பணியில் இருந்தார் அதனால் பயணிகள் பேருந்துகள் வரும் நேரம் குறித்து தெரிந்து கொள்வதற்கும்,வழக்கமாக வரும் பேருந்துகள் குறித்த நேரத்தில் வரவில்லை என்றாலும் பேருந்துகள் வருகை குறித்து தெரிந்து கொண்டு பயணிகள் பயணம் செய்வதற்கு ஏதுவாக அமைந்தது.
மேலும் அடுத்தடுத்து வரும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வதற்கும் நேரக் காப்பாளர் மூலம் நடைமுறை படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நேரம் காப்பாளர் அறை மூடப்பட்டு கிடக்கிறது. இங்கு பணியாற்றியவர் கூடலூருக்கு மாற்றப்பட்டதால் பயணிகள் பேருந்துகள் வருகை குறித்து தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பந்தலூரில் செயல்பட்டு வந்த நேரக் காப்பாளர் அறையை மீண்டும் திறந்து செயல்படுத்த போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.