ஊட்டி, அக். 30: நீலகிரி மாவட்டத்தில் முதன்மை பதப்படுத்தும் மையங்களில் கேரட் கழுவும் பணியினை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையாளர் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தில் 8 இடங்களில் முதன்மை பதப்படுத்தும் மையங்களும், ஊட்டி ரோஜா பூங்காவில் குளிர் பதன கிட்டங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒசஹட்டி, அணிக்கொரை, நியூ அல்லஞ்சி மற்றும் சுள்ளிக்கூடு ஆகிய இடங்களில் காய்கறிகளும், என்சிஎம்எஸ் கோத்தகிரியில் வெளிநாட்டு காய்கறிகளும், கூடலூர் வட்டாரத்தில் உப்பட்டி மற்றும் அய்யன்கொல்லியில் வாழைக்கான முதன்மை பதப்படுத்தும் மையங்களும் அமைக்கப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையாளர் சிரு, ஒசஹட்டி, தாவணெ, அணிக்கொரை மற்றும் நியூ அல்லஞ்சி ஆகிய இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் மையங்களில் கேரட் கழுவும் பணியினை ஆய்வு செய்தார். இங்கு தானியங்கி இயந்திரங்கள் மூலமாக கேரட் கழுவி சுத்தம் செய்யப்பட்டு, பாலீஸ் செய்யப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. முதன்மை பதப்படுத்தும் மையங்களை உபயோகித்து வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சந்தை ஒருங்கிணைப்பு பங்குதார்கள் இங்கு பாலீஸ் செய்யப்படும் கேரட்டுகள் தரம் மிக நன்றாக உள்ளதாகவும், வேளாண் சந்தையில் கூடுதல் விலை கிடைப்பதாகவும் தொிவித்தார். மேலும் நீலகிரி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நீலகிரி மாவட்டத்தில் வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக மாவட்ட அளவிலான மண்டி அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை பார்வையிட்டார்.
தொடர்ந்து, ஊட்டியில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர், சிவசுப்ரமணியம் சாம்ராஜ், வேளாண்மை துணை இயக்குநர் ஜாய்லின் சோபியா, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரிய செயற் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.