×

தீபாவளிக்கு கோவையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

கோவை, அக். 30:   தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.கோவையில் இருந்து சென்னை, மயிலாடுதுறை மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் 10க்கும் மேற்பட்ட பண்டிகைக் காலச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, கோவை மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஜமீல் அஹமது கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்க்கும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகமானோர், தீபாவளியை தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடச் செல்வார்கள். இந்தாண்டு தீபாவளிக்கு கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் வழித்தடம் மற்றும் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமலை, பழனி, மதுரை வழித்தடத்தில் முன்பதிவில்லாத, சிறப்பு விரைவு ரயில் இயக்க வேண்டும். தீபாவளிக்கு 10 நாள்கள் முன்பே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால், வெளியூர் செல்வோர்களுக்கு வசதியாக இருக்கும். அதேபோல், பண்டிகை முடிந்து 15 நாள்கள் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால், தொழிலாளர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி வந்து பணிகளைத் தொடரவும் எளிதாக இருக்கும்’’ என்றார்.




Tags : Madurai ,Coimbatore ,Thoothukudi ,Deepavali ,Nagercoil ,
× RELATED நகை பறிமுதல் விவகாரம் கோவை போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும்