×

மாமல்லபுரத்தை அழகுப்படுத்த நிதி ஒதுக்கீடு விவகாரம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை: கொரோனாவை காரணமாக கூறுவதை ஏற்க முடியாது

சென்னை:  சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு. உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், மாமல்லபுரம், பல்லவர் கால கடற்கரை நகரமாகும். தமிழர்களின் தொன்மை, கலாசாரம் ஆகியவற்றை எடுத்து கூறும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்றாகும்.
 மாமல்லபுரத்தை யுனெஸ்கோ கலாசார சின்னமாக அங்கீகரித்துள்ளது. எனவே மாமல்லபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தரமாக பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். கடற்கரை கோயில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் கலாசாரங்களை சிதைக்கும்  வகையிலான கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.

குப்பைகளை கொட்டினால் குறைந்தபட்சம் 1000 அபராதம் விதிக்க வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆங்கிலப் புலமை பெற்ற சுற்றுலா வழிகாட்டி குழுக்களை அமைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள புரதான சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும், முக்கிய இடங்களை மின்னொளியில் காட்சிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.இதை உயர் நீதிமன்றம் வழக்காக விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாமல்லபுரம் பாதுகாப்பு, பராமரிப்பு, அழகுபடுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான நிதியை ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மேலும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து வருமானம் ஈட்டும் மத்திய அரசு, அப்பகுதியை மேம்படுத்த செய்த நடவடிக்கைகள், செயல்பாடுகளை விளக்கும்படி அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

இவ்வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நாடு முழுவதும் உள்ள 16 சுற்றுலா தலங்களில்  14வது இடத்தில் மாமல்லபுரம் இடம்பெற்றுள்ளது. அதன் மேம்பாடு தொடர்பாக  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 400 பக்க அறிக்கை தயாராக உள்ளது.கொரோனா காலமாக இருப்பதால், நிதி ஒதுக்குவது பற்றி தகவல் வரவில்லை. இதுபற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்றார். அப்போது மாநில அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறோம் என்றார்.இதனை கேட்ட நீதிபதிகள், மாமல்லபுரம் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதற்கு கொரோனா பேரிடரை காரணமாக கூற முடியாது. நிதி ஒதுக்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் உறுதியான முடிவெடுக்க 4 வாரங்கள் இறுதி அவகாசம் தரப்படுகிறது. இந்த காலக்கட்டத்திற்குள் முடிவெடுக்காவிட்டால் மத்திய,   மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Tags : ICC ,governments ,state ,Mamallapuram ,Corona ,
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது