×

திருவட்டார் ஒன்றிய அலுவலகத்தில் 8 ஊராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குலசேகரம், அக். 28:  திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி  தலைவர்களின் அதிகாரத்தில் அதிகாரிகள் தலையீடு,  தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,  அதிகாரிகள் தலையீடு போன்றவற்றிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.   இதனை கோரிக்கையாக  வலியுறுத்தி திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர்  இசையாஸ் தலைமையில் குமரன்குடி ஊராட்சி தலைவர் பால்சன், ஏற்றகோடு ஊராட்சி  தலைவர் ஹெப்சிபாய், அருவிக்கரை ஊராட்சி தலைவர் சலேட் கிளிட்டஸ் மேரி,  கண்ணனூர் ஊராட்சி தலைவர் ரெஜினி விஜிலாபாய், பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர்  தேவதாஸ், செறுகோல் ஊராட்சி தலைவர் அனுசன் ஐயப்பன், சுருளோடு ஊராட்சி தலைவர்  விமலா சுரேஷ் ஆகியோர்  நேற்று திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கிராம  ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.

அங்கு அதிகாரிகள் இல்லாததால் ஊராட்சி தலைவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி  அறைமுன் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்த மனோதங்கராஜ் எம்எல்ஏ  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊராட்சி தலைவர்களை சந்தித்து தகவல்களை  கேட்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன், தாஸ் ஆகியோருடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து  போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : panchayat leaders ,office ,Thiruvattar ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...