×

வாலிபர் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

பொள்ளாச்சி, அக்.28: பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள ஜக்கார்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (32). இவரது மனைவி மீனா (26). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவருக்கும், குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், மனவேதனையில் இருந்த சிலம்பரசன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவமறிந்த நெகமம் போலீசார், சிலம்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மருத்துவமனை முன்பு கூடிய சிலம்பரசனின் உறவினர்கள், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உடுமலை ரோட்டில் திடீர் என மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த டி.எஸ்பி. சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், சிலம்பரசன் இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அவரது இறப்பு குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதற்கு போலீசார், இறப்பு குறித்து துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரரப்பு ஏற்பட்டது.

Tags : relatives ,death ,teenager ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...