×

நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 லட்சம் மோசடி ஈரோடு எஸ்பி. அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை

ஈரோடு,   அக். 28:   பவானியில் தனி நபர், சுய உதவிக்குழுவினருக்கு கடன் தருவதாக   ரூ.40 லட்சத்திற்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஈரோடு எஸ்பி. அலுவலகத்தை   முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் பாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை கடந்த மாதம் துவங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் மேலாளராக வெங்கடேஷ், சுதாகர் உள்ளிட்ட 3 பேர் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி மற்றும் பொறியியல் படித்த இளைஞர்களையும், பெண்களையும் 25க்கும் மேற்பட்டோரை பணிக்கு வைத்து, அவர்கள் மூலமும் மற்றும் துண்டு பிரசுரம் மூலமும் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனி நபர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை 1.5 சதவீத வட்டியில் கடன் தருவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.

இதனை நம்பி வந்த மக்களிடமும், சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்களிடமும், கடன் பெற ஆவண (டாக்குமென்ட்) கட்டணம் ரூ.1,250 ஆகும்.  ரூ.1 லட்சம் கடன் பெற்றால் ரூ.5 ஆயிரம், ரூ.2 லட்சம்  கடன்  பெற்றால் ரூ.10 ஆயிரம் கமிஷனாக கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். இதன்பேரில், தனி நபர் கடன் பெற ரூ.1,250ம், மகளிர்  சுய  உதவிக்குழுக்கள் மூலம் 10 பேர், 15 பேர் என குழுவாக சேர்ந்து  தனித்தனியாக தலா  ரூ.30 ஆயிரம் வரை டாக்குமென்ட் கட்டணமாக ரூ.40 லட்சம் செலுத்தியுள்ளனர்.

அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, கடன்  தராமல் நிறுவனத்தினர், தலைமறைவாகி விட்டனர். இது  குறித்து  பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்,  அந்நிறுவன  ஊழியர்கள் என தனித்தனியாக கடந்த 20ம் தேதி ஈரோடு எஸ்பி.  அலுவலகத்தில் 77  புகார் மனு அளித்தனர். இந்த புகாரை ஈரோடு மாவட்ட  குற்றப்பிரிவு போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  நிதி  நிறுவனத்தின் மேலாளர் உட்பட 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் பிடித்து  விசாரணை  நடத்தி வருவதாக தகவல் அறிந்ததும், அந்நிறுவனம் மூலம் ஏமாந்த  100க்கும் மேற்பட்டவர்கள் ஈரோடு எஸ்பி. அலுவலகத்திற்கு  வந்து  முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து ஈரோடு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்   ஞானப்பிரகாஷம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது,   பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், எங்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த   நபர்களை எங்கள் முன் நிறுத்த வேண்டும், எங்கள் பணத்தை உடனடியாக மீட்டு தர   வேண்டும் என்றனர். இதையடுத்து ஈரோடு எஸ்பி. தங்கதுரையிடம், பாதிக்கப்பட்ட   மக்கள் நேரில் சென்று முறையிட்டனர். அப்போது, எஸ்பி. தங்கதுரை  கூறியதாவது: நிதி நிறுவனத்தின் மீது நீங்கள் கொடுத்த புகாரின் பேரில்,  வழக்குப்பதிவு  செய்யப்படும். பின்னர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார்?  அந்த  நபர்களுக்கு சொத்து மதிப்பு எவ்வளவு? பங்கு தாரர்கள் எத்தனை பேர்?  என  விசாரணை நடத்தி, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும்  உரிய  நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.  இதன்பேரில்,  முற்றுகையிட்டிருந்த மக்கள் கலைந்து சென்றனர். இதனால், ஈரோடு  எஸ்பி.  அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : institution ,office victims ,
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு