×

குறிஞ்சிப்பாடி அருகே கார்-பேருந்து நேருக்கு நேர் மோதல் 2 பேர் பரிதாப பலி

நெய்வேலி, அக். 23:    குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில், காரில் வந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.  தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி மணபடைவீடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மனைவி சுந்தரி (35). இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை காரில் புதுச்சேரி அழைத்து சென்று, சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். மேலும், சுந்தரி வீட்டில் தங்கி இருந்த உறவினர் மகளான கும்பகோணம் அடுத்த மணபடையூர் காந்திவீதியை சேர்ந்த பூமிநாதன் மகள் ஜீவிதாவை (19) அழைத்து கொண்டு சென்றனர். காரினை கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் நடுபடகை வடக்கு வீதியை சேர்ந்த பரமசிவம் மகன் பிரேம்குமார் (23) என்பவர் ஓட்டினார். புதுச்சேரி சென்ற அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சுந்தரிக்கு சிகிச்சை அளித்தனர்.

 பின்னர் காரில் ஊர் திரும்பினர். நேற்று மாலை 4 மணியளவில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டிக்குப்பம் கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஜீவிதா மற்றும் ஓட்டுனர் பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சுந்தரி படுகாயம் அடைந்தார்.  இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடலூர் போலீசார் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் படுகாயம் அடைந்த சுந்தரியை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் விபத்தில் இறந்த ஜீவிதா, டிரைவர் பிரேம்குமார் ஆகியோரது உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 2 பேர் இறந்த சம்பவத்தால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. கார், பேருந்து நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kurinjipadi ,
× RELATED குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு...