×

வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

சிவகிரி, அக். 23: வாசுதேவநல்லூர் அருகே டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்ததில் விவசாயி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தும்பைமேடு முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த விவசாயி ராமபாண்டி(50). இவர் டி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாவிற்குச் சொந்தமான ஏமன்பட்டி அருகேயுள்ள வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். நேற்று ராமபாண்டி தனது டிராக்டரை வயலில் உழுவதற்காக கொண்டு சென்றார். வயலில் உள்ள கிணற்று அருகே டிராக்டரை நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கிணற்றிற்குள் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ராமபாண்டி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமுருகேசன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ராமபாண்டி உடலை மீட்டனர். டிராக்டரை உடனடியாக மீட்க முடியவில்லை. இதுகுறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொ) கோவிந்தன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Vasudevanallur ,
× RELATED வாசுதேவநல்லூரில் மமக நிர்வாகிகள் தேர்வு