×

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம், அக்.23:  திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது ஏற்பட்டதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரியை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து இருந்து வருகிறது. நேற்று அதிகாலை நாமக்கல் பகுதியில் இருந்து மாட்டுத்தீவனம் பாரம் ஏற்றிய லாரி, கர்நாடக மாநிலம் மைசூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. காலை 6 மணியளவில் லாரி 13வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதனால், மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து சீரமைத்தனர். பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு காலை 9 மணியளவில் லாரி நகர்த்தி நிறுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதனால், இரு மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : hill ,Thimphu ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!