ஆர்.எஸ்.மங்கலம், அக்.22: உப்பூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூர் உள்ளது. இப்பகுதியில் உள்ள கடலூர், மோர்பண்ணை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நாகனேந்தல், காவனூர், அத்தானூர், அடந்தனார் கோட்டை, ஊரணங்குடி, வெட்டுக்குளம், பாரனூர்,சித்தூர்வாடி, கீழச்சேந்தனேந்தல் மேலச்சேந்தனேந்தல், புதுக்காடு, மொச்சியேந்தல், கண்ணாரேந்தல் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி அதிகமான மக்கள்தொகை கொண்டதாகும். பொதுமக்களுக்கு அருகில் மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைவருக்கும் முதல் உதவி சிகிச்சைக்கு கூட அருகில் மருத்துவமனை இல்லை என்றும், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் சாலை விபத்தில் சிக்கியவர்களை கூட அவசர கால சிகிச்சைக்கு ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நாகனேந்தல் விலக்கு ரோடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த டூவீலர்கள் விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே இந்நிலையை மாற்றும் விதமாக உடனடியாக உப்பூர் பகுதியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.