×

நிலுவை ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பணியாளர்கள் போராட்டம்

ஊட்டி, அக். 22: நிலுவை ஊதியம் கேட்டு ஊட்டி நகராட்சி அலுவலகம் முன் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி நகராட்சியில் 750க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், தூய்மை பணியாளர்கள் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இது தவிர பொறியியல் துறை உட்பட இதர துறைகளில் 450 பேர் பணியாற்றி வருகின்றனர்.
பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நகராட்சி நிர்வாம் மாதம் தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்குவது வாடிக்கை. மேலும், நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடை வாடகை, பல்வேறு வரிகள் ஆகியவைகளை வசூலித்தே இந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், வசூல் செய்வதில் தாமதம் ஏற்படும் சமயத்தில் தொழிலாளர்கள் நலன் கருதி வேறு நிதியில் இருந்து ஊதியத்தை வழங்கி, பின் அதனை ஈடுசெய்யப்படுவது வழக்கம்.  

ஆனால், கடந்த 6 மாதமாக 20ம் தேதிக்கு மேல் தான் ஊதியம் வழங்குவதை நகராட்சி நிர்வாகம் வாடிக்கையாக கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக தூய்மை பணியாளர்கள் சாதாரண நாட்களில் செய்யும் வேலையைவிட இரு மடங்கு அதிகமாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் அக்கறை கொள்ளாமல் மாதம்தோறும் தாமதமாக ஊதியம் வழங்கி வந்தது.  தூய்மை பணியாளர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாத ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், தற்காலிக தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாத காலமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்தது. இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நிலுவை ஊதியம் கேட்டு நேற்று ஊட்டி நகராட்சி அலுவலகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அவர்களை சமாதானம் செய்ய அங்கு ஆணையாளர் உட்பட அதிகாரிகள் யாரும் வரவில்லை.

மேலும், தொலைபேசி மூலம் சில ஊழியர்களை தொடர்பு கொண்டு இரு நாட்களில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு பின் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், வழக்கமாக எங்களுக்கு 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும். ஆனால், கடந்த 6 மாத காலமாக எங்களை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. மாதம் தோறும் 20ம் தேதிக்கு மேல் தான் ஊதியத்தை தருகின்றனர்.

மேலும், பி.எப். உள்ளிட்ட எந்த பணப்பலன்களையும் வழங்குவதில்லை. உயர் அதிகாரிகள் எங்களின் குறைகளை கேட்பதே இல்லை. அதேசமயம், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கி அனைத்து கான்ட்ராக்டர்களுக்கும் மாதம்தோறும் லட்சக்கணக்கில் பணத்தை தருகின்றனர். ஆனால், தொழிலாளர்களை கண்டுகொள்வதில்லை. தூய்மை பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியமும் பிற பணியாளர்களுக்கு 3 மாத சம்பளமும் வழங்கவில்லை.
மேலும், நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலருக்கும் கடந்த ஓராண்டு காலமாக எவ்வித பணப் பலன்களும் வழங்குவதில்லை. அதனை கேட்க செல்பவர்களையும் நகராட்சி அதிகாரிகள் சந்திப்பதில்லை. கடந்த 6 மாத காலமாக நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்’ என்றனர்.

Tags : office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்