நாமக்கல், அக்.21: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 1,200 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இதை கொள்முதல் செய்ய சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹4,620 முதல் ₹5,299 வரை ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 1200 மூட்டை பருத்தி, ₹16 லட்சத்துக்கு ஏலம் போனது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.