×

சாத்தான்குளம் அருகே பேராசிரியையிடம் நகை பறிக்க முயன்ற இருவர் கைது.

சாத்தான்குளம், அக்.21: சாத்தான்குளம் அருகே கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகேயுள்ள மணிநகர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோபால் மகள் வசந்தி (30). இவர் கொம்மடிக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் ஸ்கூட்டரில் கல்லூரி சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அடைக்கலாபுரம் அருகில் வரும்போது பைக்கில் வந்த இருவர், வசந்தியின் ஸ்கூட்டரை வழிமறித்து அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டு பைக்கில் வந்த இருவரையும் பிடித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த துரை மகன் முருகன் (31), பூதத்தார் மகன் கதிர்வேல் (31) என்பதும், நாகர்கோவிலில் இருந்து உடன்குடியில் உள்ள உறவினரை பார்க்க வந்தபோது பேராசிரியையை வழிமறித்து நகை பறிக்க முயன்றதாக தெரியவந்தது. இதுகுறித்து தட்டார்மடம் எஸ்.ஐ ஐயப்பன் வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் விசாரணை நடத்தி நகை பறிக்க முயன்ற இருவரையும் கைது செய்தார்.

Tags : Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...