×

மதுரை மாவட்டத்தில் கிசான் முறைகேட்டில் ரூ.2.50 கோடி வசூல்

மதுரை, அக். 21:  மதுரை மாவட்டத்தில் கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.2.50 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் நிதியுதவி திட்டத்தில் போலியான நபர்களை சேர்த்து, பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மதுரை மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் முதல் இத்திட்டத்தில் 16,435 பேர் சேர்க்கப்பட்டனர். இதில் 13 ஆயிரத்து 77 பேர் விவசாயி அல்லாத தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டது. இவர்களிடம் இருந்து பணத்தை மீட்க, கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண் அலுவலர்கள், போலீசார் என சிறப்பு குழு நியமிக்கப்பட்டு, பணத்தை மீட்டு வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று வரை, 6,712 பேரிடமிருந்து ரூ.2 கோடியே 50 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 6 ஆயிரம் பேரிடம் பணம் மீட்க வேண்டும். முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Madurai district ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...